Posted by : ஆனந்த் சதாசிவம் Tuesday, August 6, 2013


தலைவலி மிக சாதாரணமாக பலருக்கும் வரக்கூகூடிய ஒரு பிரச்சினை. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் எப்போதாவது ஒரு முறை தலைவலி வந்த அனுபவம் இருக்கும். பொறுக்க முடியாத வலி ஏற்படும் போது வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தினசரி பணிகளில் ஆர்வம் குறைந்து போகும் நிலை வரலாம்.
 
சிலருக்கு அடிக்கடி வரும் மைக்ரேன் எனப்படும் தலைவலி பலவித சிக்கல்களை கொண்டு வரக்கூடியது. சாதாரணமாக அதிக மன அழுத்தம், வேலை பளு இவற்றால் வரும் தலைவலி, க்ளஸ்டர் தலைவலி எனப்படும் தொடர் தலைவலி போன்றவை மற்ற உடல் நலக் குறைபாடுகளை எதிரொலிப்பது இல்லை.
 
ஆகவே கவலை படத்தேவையில்லை. ஆனால் சில சமயம் கண், மூக்கு, சுவாச கோளாறுகள், தலையில் உள்ள சைனஸ்களில் நீர் கோர்த்து இருப்பது, பல்வலி போன்றவையும் தலைவலியை கொண்டு வரக்கூடும்.
 
அதுமட்டும் இன்றி சில சமயம் தலையில் ஏற்பட்ட காயங்கள், அதிக ரத்த அழுத்தம், இதனால் ஏற்படும் சில பக்கவாதம் மூளைக்கு ரத்தம் எடுத்து செல்லும் தமனிகளில் ஏற்படக் கூடிய ரத்த அழுத்தம், மூளையில் ஏற்படக் கூடிய சீழ், மற்றும் மூளை காய்ச்சலின் ஆரம்ப அறிகுறி கூட தலைவலி ஏற்பட காரணம் ஆகலாம். 90 சதவிகித மக்களை எந்தப் பாகுபாடும் இல்லாமல் பாதிப்பதில் தலைவலி முக்கிய இடத்தைப் பெறுகிறது.
 
தலை வலிக்கென்று தனி மருத்துவமனைகள் உலகின் முக்கிய நகரங்களில் வர ஆரம்பித்து விட்டன. தலைவலிக்கு மட்டும் தனியாக டாக்டர்கள் வந்து விட்டார்கள். இவர்களில் சென்னை வடபழனி ஆகாஷ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையை சேர்ந்த டாக்டர் ஜி.கே.குமாரும் ஒருவர். அவர் தலைவலி சிகிச்சை முறைகள் பற்றி கூறியதாவது:-
 
பொது மக்களால் அலட்சியமாகக் கையாளப்படுகிற தலைவலியும் அதிகமாக இருக்கிறது. தலைவலியில் 2 வகை இருக்கிறது. முதல் வகையை பிரைமரி ஹெட்-ஏக் என்கிறார்கள். உடல்ரீதியாக ஒரு மாற்றம் ஏற்படும் போது தலையில் மூளையைச் சுற்றி உள்ள ரத்தக் குழாய்கள் விரிவடைந்து தளர்ந்து மூளையிலும் அதைச் சுற்றிலும் உள்ள நரம்புகளை அழுத்துகின்றன.
 
இந்த நேரத்தில் ஏற்படும் தலை வலியை பிரைமரி ஹெட்ஏக் என்கிறோம். மற்ற படி மூளையில் கட்டி, அடிபட்டிருந்தல், நோய்த் தொற்று இருத்தல் போன்ற காரணங்களால் ஏற்படுகிற தலைவலியை செகன்டரி ஹெட்ஏக் என்கிறோம். பொதுவாக முதல் வகை தலைவலிக்கு எந்த வகையான நேரடி காரணமும் இருக்காது.
 
பார்வையில் மாற்றம், குமட்டல், வாந்தி, மயக்கம் போன்ற ஏதோ ஒன்றோ இருக்குமானால் நீங்கள் கண்டிப்பாக உடனே ஒரு மருத்துவரைச் சந்திக்க வேண்டும். இது மூளைக் கட்டி, ரத்தக் கசிவு, நோய்த் தொற்று போன்ற ஏதோ ஒன்றோடு தொடர்பில் இருக்கலாம்.
 
வலி நிவாரண மாத்திரைகள்::
 
பரசிடமோல் இதற்கு நன்கு வலி நிவாரணமளிக்கும் மருந்தாகும். தலைவலி ஆரம்பித்த உடனேயே முழு அளவிலான மருந்தினை எடுத்துக் கொள்வது மிகவும் பயனளிக்கத் தக்கது. தலைவலி முற்றாகத் தீவிரமடையும் முன் இவ்வாறு மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் முற்றான தலைவலி நிவாரணத்தைப் பெற முடியும்.
 
தேவை ஏற்படின் இரண்டாவது மாத்திரையை நான்கு மணி நேர இடைவெளியின் பின்னர் எடுத்துக் கொள்ள முடியும். பரசிடமோலுடன் கூட்டான மருந்துகளை தவிர்ப்பது உகந்தது. அழற்சிக்கெதிரான வலிநிவாரண மருந்துகள் இவை கூட பரசிடமோலுக்குப் பதிலாகப் பயன்படுத்த முடியும்.
 
வலிநிவாரண மாத்திரைகளை சில நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் மாதம் ஒன்றில் 15 நாட்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. தலைவலியினைத் தவிர்ப்பதற்காக எந்நேரமும் வலிநிவாரண மருந்துகளை உட்கொள்ளக் கூடாது. தலைவலி ஏற்படும் போது மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
 
உணவு முறைகள்::
 
சிகிச்சைமுறை: அடிப்படையாகச் சில மருந்துகளைப் பயன்படுத்துதல், டிடாக்சிபிகேஷன் முறைகள், போட்டுலினம் ஊசிகள் வழி நரம்புகளைத் தளர்த்துதல், டிரிகர் பாயிண்ட் இன்ஜக்ஷன்ஸ், ஆக்ஸ்பிடல் நெர்வ் ப்ளாக், மற்றும் தேவைப்படுகிறவர்களுக்கு பழக்க வழக்கப் பயிற்சிகள்.
 
உணவு முறைகள்:
 
சில சமயத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் கூட தலைவலியை உருவாக்கிவிடும். காபியில் இருக்கிற காபின், வெண்ணையில் இருக்கிற டைரமைன், வாழைப்பழம் போன்ற சில பழங்கள், சிட்ரஸ் இருக்கிற ஆரஞ்சு, லெமன் போன்ற சில வகை உணவுப் பொருட்களுக்கு தலைவலியைத் தூண்டுகிற சக்தி இருக்கிறது.
 
சாப்பிட முடியாமல் போவது, சாப்பிடும் நேரங்களில் மாற்றம் போன்ற சில பழக்கங்களும் தலைவலியைத் தூண்டும். உணவில் காய்கறி, பழங்கள், கீரையை அதிகம் சேர்க்க வேண்டும். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
 
எம்.எஸ்.ஜி. இருக்கிற  அஜினோமோட்டோ கூட ஒரு தலைவலி தூண்டல் இருக்கிற உணவுப் பொருள்தான். சரியான உணவு, நல்ல தூக்கம், மிதமான உடற்பயிற்சிகள், சில மனம், உடல் தளர்வடையச் செய்யும் பயிற்சிகள் போன்றவற்றை முறையாகச் செயல்படுத்தினால் தலைவலிகள் ஏற்படுவதை இயற்கையாகவே தவிர்க்கலாம்.
 
அடிக்கடி தலைவலியால் அவதிப்படுகிறவர்கள் ஒரு மருத்துவரின் உதவியோடு மாத்திரைகளை எடுத்துக் கொள்வது நலம். கடைகளில் நேரடியாக நீங்கள் வாங்குகிற வலி மாத்திரைகளால் அல்சர், கிட்னி பிரச்சினை போன்ற மிகப் பெரிய தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.
 
தடுக்கும் முறைகள்:
 
மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலியை குறைக்க மனதையும், உடலையும் தளர்த்துதல் அவசியம். ஓய்வு போன்றவை அழுத்தம் காரணமாக தலைவலியை தடுக்க உதவும்.
 
மூச்சுப் பயிற்சி, உடலைத் தளர்த்தும் பயிற்சிகள், பிரச்சினைகளை கையாளப் பழகும் உத்திகள் போன்றவை மன அழுத்தத்தின் போது பதட்டத்தினை குறைத்துக் கொள்ளவும் தலைவலியினைத் தவிர்க்கவும் உதவும்.  உடற்பயிற்சிகளில் ஈடுபடாதவர்களிடம் அழுத்தம் காரணமான தலைவலி கூடுதலாக காணப்படுகிறது.
 
இப்படிப்பட்டவர்கள் நடைபயிற்சி, ஓட்டம், சைக்கிளோட்டம், நீச்சல் போன்றவற்றில் ஈடுபடலாம். இவை தலைவலிக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியம் பேணவும் உதவும்.
 
ஒற்றை தலைவலி::: தலைவலியில் பிரபலமான ஒற்றைத் தலைவலி தான் இந்த மைக்ரேன் தலைவலி, தாங்க முடியாத ஒருபுறத் தலைவலி ஏற்பட்டு குமட்டல், வாந்தி ஏற்படும். இந்த வகை தலைவலி 18 சதவீத பெண்களையும், 6 சதவீத ஆண்களையும் தாக்குகிறது.
 
தலைவலி பலவிதம்::
 
மைக்ரேன் தலைவலி,டென்ஷன் டைப் தலைவலி,கொத்துத் தலைவலி என்று பலவகை தலைவலி உள்ளன.
 
டென்ஷன் தலைவலி::
 
டென்ஷனால் வருகிற தலைவலி தான் முதல் வகை தலைவலிகளில் பிரதானமானது. இப்படி டென்ஷனால் வருகிற தலைவலி 80 சதவீíதம் பேரை  பாதிக்கிறது என்று வளர்ந்த நாடுகளில் எடுக்கப்பட்ட ஒரு சர்வே தெரிவிக்கிறது. மன அழுத்தம் அல்லது டென்ஷன் தலைவலியை உருவாக்குகிறது என்பதல்ல. இது ஒரு வசதிக்காகவே சொல்லப்படுகிறது. டென்ஷனால் ஏற்படுகிற தசை இறுக்கமே அந்த தலைவலிக்கு முக்கிய காரணம்.
 
கொத்து தலைவலி::
 
தலையில் ஒரு பக்கம் வலி ஏற்பட்டு அதே பகுதி கண்ணில் சிவப்பும், நீர்ச் செறிவும் நிறைந்து காணப்படும். கை, காலில் வெட்டு ஏற்பட்டால் ஏற்படும் வலியை விட இந்த வகையில் அதிக வலி இருக்கும். பெண்களை விட ஆண்களையே இந்தத் தலைவலி அதிகம் தாக்குகிறது. சிலர் இஷ்டத் திற்கும் மாத்திரைகள் பயன்படுத்துகிறார்கள். இதனைக் குறைக்க முயலும் போது தலைவலி ஏற்படும் இந்த வகை தலைவலியில் இருந்து விடுபட நிச்சயம் ஒரு மருத்துவரின் உதவி தேவை. சர்க்கரை நோய், அதிக அளவு ரத்த அழுத்தம் போன்றவை கூட தலைவலிக்கு காரணமாக இருக்கலாம்.
 
மைக்ரே தலைவலி:
 
மைக்ரேன் வகை தலைவலி உடல்ரீதியான மாற்றங்களால் மட்டும் ஏற்படுகிறது என்பதற்கு நிறைய பரிசோதனை முடிவுகள் இருக்கின்றன. மைக்ரேன் தலைவலியின் போது மூளையில் பயலாஜிக்கல் மாற்றங்கள் நிகழ்கின்றன. புறக் காரணங்கள், அகக் காரணங்கள் இந்த மாற்றத்திற்கு ஒரு தூண்டுகோலாக இருக்கலாம் என்கிறார் டாக்டர் ஜி.கே.குமார்.


Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

பிரசித்தி பெற்றவை

Powered by Blogger.

மொழி மாற்றம்

பார்த்தவர்கள்

Copyright © மருத்துவம்